அப்பன் இருக்கிறான்: ஒரு சிவராத்திரி நினைவலை!
சென்னை... பிழைக்க வரும் எவரையும் இந்த ஊர் அவ்வளவு சீக்கிரம் கைவிடுவதில்லை. ஆனால், ஆரம்பத்தில் அது கொடுக்கும் நெருக்கடி இருக்கிறதே, அது ஒரு தனி ரகம்.
அந்தப் புதுசு... கண்கள் நிறைய அடுத்த கட்டத்தைப் பற்றிய கனவுகளும், உள்ளுக்குள் ‘இன்னும் உயர வேண்டுமே’ என்கிற ஒரு தவிப்பும் இருந்த காலம் அது. சைதாப்பேட்டையில் நண்பர்களோடு ஒரு சின்ன அறை. ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய், கையில் காசில்லாத போதும் ஒரு பிடிமானத்தோடு இருந்த அந்த நாட்கள் தான் இன்று நான் நிற்கும் வாழ்வின் அஸ்திவாரம்.
அந்த முதல் சிவராத்திரி
அன்று ஒரு சிவராத்திரி. என் நண்பனை அழைத்தேன், "வாடா... இந்த சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குப் போய் வரலாம்" என்று. அவனோ முதலில் தயங்கினான். அன்றைய இளைஞர்களுக்கே உரிய அந்த லேசான நாத்திகமோ அல்லது அயர்ச்சியோ தெரியவில்லை. நான் விடவில்லை. "ஏதோ ஒரு நம்பிக்கை... போய்த்தான் பார்ப்போமே, நல்லது நடந்தால் சந்தோஷம் தானே?" என்று சொல்லி வண்டியை எடுத்தேன். வண்டிக்கு ஒரு பத்து ரூபாய் பெட்ரோல் போட்டால் மனதுக்கும் கொஞ்சம் தெம்பு ஏறும். அந்தப் பத்து ரூபாய் பெட்ரோலில் தான் எங்கள் நம்பிக்கையே ஓடிக்கொண்டிருந்தது.
அன்று காரணீஸ்வரர் கோயிலில் பெரிய கூட்டமில்லை. ஈசனின் தரிசனம் முடித்து அமர்ந்தால், அங்கே மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு. "இந்தக் கதை இப்படித்தான் முடியும்" என்று நான் முன்கூட்டியே சொல்ல, என் நண்பன் ஆச்சரியமாகப் பார்த்தான். "கிருபானந்த வாரியாரின் சீஷ்யை... அவர் பாணி எனக்குத் தெரியுமடா" என்றேன். அந்தச் சொல்லாடல்களில் ஒரு ஈர்ப்பு வந்தது.
அடுத்த கால பூஜையும் வந்தது. பிரசாதம் விநியோகிக்க இளைஞர்கள் தேவைப்பட, எங்களையும் அழைத்தார்கள். என் நண்பன், எதற்கும் தயங்குபவன், அன்று தன் முழு பலத்தையும் காட்டி அந்தச் சேவையில் இறங்கினான். அன்று இரவு முழுக்க பரதநாட்டியம், பக்தி, அந்த ஆலயத்தின் அமைதி என விடிய விடிய ஈசனின் நிழலிலேயே தங்கிவிட்டோம்.
தேடலும் விடையுமாய் ஈசன்
ஈசன் கைவிடவில்லை.
அடுத்த சில மாதங்களிலேயே அவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. "மச்சி... அடுத்த சிவராத்திரிக்கு மறக்காம அதே கோயிலுக்குப் போகணும்டா" என்று அவன் சொன்ன போதுதான் புரிந்தது, அவன் மனதுக்குள் அந்த இறைவன் மெல்ல நுழைந்துவிட்டான் என்று. மெல்ல மெல்ல ஒவ்வொருவராக வாழ்க்கையின் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டோம்.
காலம் எங்களை வெவ்வேறு திசைகளில் பிரித்திருக்கலாம். பிழைப்புக்காக ஆளுக்கொரு திசையில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு சிவராத்திரி வரும்போதெல்லாம் எங்களை இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத சரடு அந்தப் பழைய நினைவுகள் தான்.
தொடரும் பயணம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், தையூர் செங்கன்மாலீஸ்வரர் எனப் பல ஆலயங்களைத் தரிசித்த நான், இன்று சிவராத்திரி அன்று மணிமங்களத்தில் ஞானாம்பிகை சமேத கைலாசநாதர் ஆலயத்தில் நிற்கிறேன்.
அன்று சென்னைக்கு வந்து ஒரு பிடிமானத்திற்காகத் தேடிய எங்களைப் போல, இன்றும் பல இளைஞர்கள் தேடலோடு, கண்ணில் கனவுகளோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:
"அப்பன் இருக்கிறான்... அவன் கைவிட மாட்டான்." அந்த மகா சிவபெருமான் மீதான நம்பிக்கையே உங்கள் வாழ்வின் ஒளியாகட்டும். விழித்திருப்போம்... அவன் அருளால் உயர்வோம்!
சிவாய நம! 🙏🏻
#Shivaratri #PersonalJourney #ChennaiDiaries #Spirituality #Karaniswarar












