நண்பர்களும் புரிதலும்
இன்று நண்பர்களுக்கிடையே ஏற்படும் பல குழப்பங்களுக்கும், மனக்கசப்புகளுக்கும் முக்கிய காரணம் என்ன என்று யோசித்தால், என் மனதில் முதலில் தோன்றும் வார்த்தை — "புரிதல்".
நண்பர்களுக்குள் அந்த புரிதல் இருந்துவிட்டால், பல பிரச்சினைகள் உருவாகவே உருவாகாது. சாதாரணமாக நடந்த சம்பவங்கள் கூட, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அழகான நினைவுகளாக மனதில் பதிந்துவிடும்.
அப்படி என் கல்லூரி வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள், நட்புக்கும் புரிதலுக்கும் சிறிய சான்றுகள்.
செல்வராஜ், டேவிட் — கல்லூரி காலம் முதல் இன்று வரை என் நெருங்கிய நண்பர்கள்.
கல்லூரி இறுதியாண்டில், யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல், விடுதியை விட்டு வெளியே தங்கி படிக்க முடிவு செய்தோம்.
சிவகாசியின் சசி நகரில் ஒரு பெரிய வீடு. ECE மற்றும் CSE நண்பர்கள் சேர்ந்து மொத்தம் பத்து பேருக்கும் மேல் தங்கியிருந்தோம்.
விடுதியின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்த எங்களுக்கு, அந்த வாழ்க்கை புதிதாக இறக்கை முளைத்த பறவைகளின் சுதந்திரத்தைப் போல இருந்தது.
எங்கள் வீட்டைச் சுற்றி compound சுவர் இருந்தது. மாலை நேரங்களில் அந்த குட்டிச் சுவரில் அமர்ந்து அரட்டை அடிப்பது எங்களின் வழக்கம்.
ஒரு நாள் அப்படி அமர்ந்திருந்தபோது, ECE நண்பர்கள் சிலர் மிகவும் serious-ஆக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் வழக்கம்போல ஒரு நகைச்சுவை சொல்ல, செல்வாவும் டேவிட்டும் சிரித்தார்கள்.
அதில் எரிச்சலடைந்த ஒரு நண்பன்,
"நாங்க இங்க serious-ஆ பேசுறோம்... உங்களுக்கு புரியாது..."
என்று முகத்தைச் சுளித்தான்.
அடுத்த நொடி, நான் சுவரிலிருந்து கீழே குதித்தேன்.
அதே தருணத்தில்...
மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
செல்வாவும், டேவிட்டும் என்னுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.
யாரும் யாரையும் அழைக்கவில்லை.
எதுவும் பேசவில்லை.
ஆனால் நாங்கள் மூவரும் ஒன்றாக அந்த இடத்தை விட்டு நடந்தோம்.
அது நட்பு.
அதை விட முக்கியமாக...
அது புரிதல்.
---
இரண்டாவது சம்பவம்.
எட்டாவது செமஸ்டர்.
பெரும்பாலும் வகுப்புகள் இருக்காது. இருந்தாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததால் A மற்றும் B பிரிவு மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A பிரிவு பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
எங்களைப் பார்த்தவுடன்,
"இது A Section class. மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம்..."
என்று கூறினார்.
நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அதையே கூறினார்.
அப்போதும் அமைதியாக இருந்தோம்.
மூன்றாவது முறையாகவும் அதே வார்த்தைகள் வந்தவுடன், செல்வா எந்த தயக்கமும் இல்லாமல் எழுந்தான்.
அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் நானும், டேவிட்டும் எழுந்துவிட்டோம்.
மூவரும் ஒன்றாக வெளியே நடந்தோம்.
எங்களைப் பார்த்து எங்கள் B Section நண்பர்களும் வெளியே வந்தார்கள்.
அந்த தருணம் இன்று நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கிறது.
---
நட்பு என்பது எப்போதும் ஒன்றாக இருப்பது அல்ல.
சில நேரங்களில் வார்த்தைகள் இல்லாமலேயே புரிந்து கொள்வது.
அழைக்காமலேயே கூடவே நடப்பது.
விளக்கம் கேட்காமலேயே மனதை புரிந்து கொள்வது.
அதுதான் உண்மையான நட்பு.
இன்று செல்வா எங்களுடன் இல்லை.
ஆனால் அவன் விட்டுச் சென்ற நினைவுகளும்...
எங்களுக்குள் இருந்த அந்த புரிதலும்...
இன்றும் எங்களுடன் இருக்கின்றன.
Miss You, Selva.
புரிதலுடன்,
ராஜா. க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக