சில பாடல்கள் டிவியில் ஓடும்போது, ரிமோட் கையில் இருந்தாலும் சேனல் மாற்ற மனசே வராது.
பார்த்திபன் கனவு படத்தில் வரும் "ஆளுங்குயில் கூவும் ரயில்" அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று.
இந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம், வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் "சிப்பி இருக்குது முத்து இருக்குது" பாடலின் feel எனக்கு ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடலில் ஹீரோ கமல் பேசிக்கொண்டே பாடுவார். இந்தப் பாடலில் ஹீரோயின் பாடிக்கொண்டிருக்க, ஹீரோ சில வார்த்தைகள் மட்டும் சொல்ல... அதற்கு பதிலாக கவிதை போல பாடல் வரிகள் வருவது இந்தப் பாடலின் தனி அழகு.
எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்...
திருக்குறள்...
"இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்..."
இந்த வரிகள் வரும் போது, ஸ்ரீகாந்த் மெதுவாக ஸ்நேகாவிற்கு அருகில் வந்து அமரும் அந்தச் சிறிய தருணம்... பெரிய காதல் வசனங்களை விட அந்த ஒரு movement-தான் மனதில் நிற்கிறது.
"கண்ணாடி..."
"இதில் என்னைப் பார்க்கிறேன்... அது உன்னைக் காட்டுதே!"
எவ்வளவு எளிமையான வரிகள்... ஆனால் காதலை அழகாகச் சொல்லிவிடுகின்றன.
"மீசை..."
"இது எனக்கு மட்டும் சொந்தமாகும்... கூந்தல் குழந்தைதான்."
இப்படி சாதாரண வார்த்தைகளையே கவிதையாக்கி இருப்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய பலம்.
இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகுதான், கர்நாடக இசையின் காபி ராகத்தை அடிப்படையாக வைத்து இசையமைப்பாளர் வித்யாசாகர் இவ்வளவு அழகாக compose செய்திருக்கிறார் என்று அறிந்தேன். அதிலும், இறுதியில் "என்ன தவம் செய்தனாய் யசோதா" என்ற கர்நாடக இசைத் தொடுதலோடு பாடலை முடிப்பது... ஒவ்வொரு முறையும் கேட்கும்போது ஒரு தனி ஆனந்தத்தை தருகிறது.
90s kids-களின் favourite ஜோடிகளில் ஒன்றான ஸ்நேகா மற்றும் ஸ்ரீகாந்த், இந்தப் பாடலில் நடித்ததே இல்லை... வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருவரின் இயல்பான நடிப்பு, இந்த மெலடிக்கு இன்னும் உயிர் சேர்க்கிறது.
ஒரு பாடல் வெற்றி பெறுவது இசை, வரிகள், பாடகர்கள் மட்டுமல்ல... அதை எப்படி திரையில் கொண்டு வருகிறார்கள் என்பதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் கரு. பழனியப்பன், இந்தப் பாடலை மிகுந்த ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
Last but not least...
இந்தப் பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் பாடகி ஹரிணி. எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர்.
Gen Z-க்கு சொல்லணும்னா... இன்று உங்களுக்கு favourite-ஆ இருக்கும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் அம்மாதான் இந்தப் பாடலைப் பாடிய ஹரிணி.
சில பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும்...
சில பாடல்கள், "இப்படி ஒரு காதல் நமக்கும் நடந்திருந்தா எவ்வளவு அழகாக இருந்திருக்கும்..." என்று கனவு காண வைக்கும்...
"ஆளுங்குயில் கூவும் ரயில்" எனக்கு அந்த இரண்டு வகையிலும் சேர்ந்த பாடல்.
அடுத்த முறை இந்தப் பாடல் டிவியில் வந்தால்... சேனலை மாற்றாதீங்க.
ஒரு ரசிகன் சொல்றான்...
ஒரு முறை feel பண்ணி பாருங்க.
இவன்,
ராஜா. க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக