சிலர் சிரிப்பால் நினைவில் நிற்பார்கள்.
சிலர் பேச்சால் மனதில் நிற்பார்கள்.
ஆனால் சிலர்...
அவர்களின் கண்களால் மட்டும்
நம்முள் ஒரு இடத்தை உருவாக்கி விடுவார்கள்.
நீ எத்தனை முறை
உன் கண்களின் புகைப்படத்தைப் பகிர்ந்தாலும்,
அதை நான் வெறும் புகைப்படமாகப் பார்ப்பதில்லை.
ஒவ்வொரு முறையும்
புதிதாக திறக்கும்
ஒரு கவிதையின் கதவாகத்தான் பார்க்கிறேன்.
உன்னை முதல் முறையாகப் பார்க்கவில்லை.
ஆனால்,
ஒவ்வொரு முறையும்
உன் கண்கள் என் கண்களைத் தொடும்போது,
வார்த்தைகள் வருவதில்லை.
வியப்புதான் வருகிறது.
கவிதை எழுத நினைக்கிறேன்.
ஆனால்,
என்னை அறியாமலே
கவிதையாக மாறி நிற்கிறேன்.
"என் கண்களில் அப்படி என்னதான் இருக்கிறது?"
என்று
குறும்பாய் கேட்கும் உன் கண்களுக்கு,
எப்படி சொல்வது?
இந்த மண்ணில் பிறந்த
ஒரு புதுக் குழந்தை,
முதல் முறையாக
வானத்தையும்,
வண்ணங்களையும்,
வாழ்க்கையையும்
விரிந்த விழிகளால்
வியந்து பார்ப்பதைப் போல,
உன் கண்களை
ஒவ்வொரு முறையும்
புதிதாகப் பார்க்கிறேன்.
நேற்று பார்த்த கண்கள்தான்.
ஆனால் இன்று,
அதில் ஒரு புதிய நிலவு உதிக்கிறது.
இன்று பார்த்த கண்கள்தான்.
ஆனால் நாளை,
அதில் ஒரு புதிய உலகம் பிறக்கிறது.
அதனால்தான்,
உன் கண்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,
நான் காதலனாக இருப்பதில்லை.
இந்த உலகத்தை
முதல் முறையாகக் காணும்
ஒரு குழந்தையாகி விடுகிறேன்.
அந்த வியப்பின் பெயர்தான்
என் கவிதை.
அந்த கவிதையின் முகவரிதான்
உன் கண்கள்.
இவன்
ராஜா க ✍🏻

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக